ஆண்மை தவறேல் – 36

(Tamil Kamakathaikal - Aanmai Thavarael 36)

Raja 2013-12-18 Comments

Tamil Kamakathaikal – “ம்ம்.. நீ சொல்ல வர்றது எனக்கு புரியுதும்மா.. வீம்புக்கு சொல்றான்னு நாமளும் சும்மா விட்ற கூடாது..!!”

“ஆமாம் மாமா..!! வீம்புக்கு போறேன்னு போயிட்டு.. மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிட்டா..??”

“கரெக்ட்தான்மா.. ஆனா அவனை கண்ட்ரோல் பண்றது கஷ்டமாச்சே..??”

“அதான் மாமா.. எனக்கும் பயமா இருக்கு..!!”

“ம்ம்ம்ம்ம்ம்.. அந்த நாயர் பயலை உதைச்சா எல்லாம் சரியா வரும் நந்தினி.. அவன்தான் இவனை கெடுக்குறது..!!” மஹாதேவன் அந்த மாதிரி எதேச்சையாக சொல்ல, நந்தினி இப்போது நெற்றியை சுருக்கினாள்.

“அது யாரு மாமா.. நாயர்..??”

“இவன் புடிச்சு வச்சிருக்குற ஏஜன்ட்.. அவன்தான் இவனுக்கு பொண்ணுக ஏற்பாடு பண்றவன்..!!”

“ஓ..!!”

அப்புறமும்.. மஹாதேவனும், கௌரம்மாவும் அவளிடம் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். இனி அசோக்கை அவர்கள் எவ்வவாறு அணுக வேண்டும் என்பது பற்றி பேசிக்கொண்டார்கள். அவர்கள் கேட்கிற கேள்விகளுக்கு, நந்தினியும் அனிச்சையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால் அவளுடைய மூளை வேறெதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தது.

ஒரு திட்டம் அவளுடைய மனதில் பூத்தது..!! ‘அதை முயற்சி செய்து பார்க்கலாமா..?? வேண்டாமா..??’ என்று கொஞ்ச நேரம் அவளுடைய மனதுக்குள் ஒரு விவாதம்..!! மிக சீக்கிரமே நந்தினி ஒரு முடிவுக்கு வந்தாள். எடுத்த முடிவை உடனே செயல்படுத்த எண்ணினாள். காலம் தாழ்த்துவது தவறென நினைத்தாள்.

அன்று மாலை ஐந்து மணிக்கெலாம் நந்தினி வீட்டில் இருந்து கிளம்பினாள். அவள் எங்கே செல்கிறாள் என்று தெரிந்து கொண்ட கௌரம்மாவோ பதறினாள். காரை நோக்கி நடந்து கொண்டிருந்த நந்தினியின் பின்னால், கெஞ்சிக்கொண்டே சென்றாள்.

“என்ன நந்தினிம்மா நீ.. அவங்கள்லாம் ரொம்ப மோசமான ஆளுக..!!”

“யாரா இருந்தா என்ன..?? அவங்களும் மனுஷங்கதானம்மா..?? அவங்ககிட்ட மனசாட்சி கொஞ்சம் கூடவா இருக்காது..??”

“ஏதாவது பிரச்னையாயிட போவுதும்மா..!!”

“ஒன்னும் ஆகாது.. நீங்க கவலைப்படாதீங்க..!!”

“எதுக்கும் ஐயாட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோ நந்தினிம்மா..”

“ஐயோ.. மாமாவுக்கு தெரிஞ்சா என்னை போக விட மாட்டாரு..!! அவருக்கு தெரிய வேணாம்..!!”

“துணைக்கு நானாவது வரட்டுமா..?”

“அதான் ராமண்ணா இருக்காரே.. அப்புறம் என்ன..??”

நந்தினி காருக்குள் ஏறி அமர்ந்து கொள்ள, ராமண்ணா காரை கிளப்பினார். கார் ஒரு அரைவட்டம் அடித்து கேட் நோக்கி நகர்ந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில் நந்தினி பெசன்ட் நகர் கெஸ்ட் ஹவுசில் இருந்தாள். கேட் திறந்து விட்ட வாட்ச்மேனிடம்,

“வாட்ச்மேன் அண்ணா.. வணக்கம் அண்ணா..!!”

என்று புன்னகையுடன் சொன்னாள். வாட்ச்மேன் ஆடிப்போனான். அவன் மூலமாக தெரிந்து கொண்ட நாயரின் அட்ரஸை நந்தினி சென்றடைய, மேலும் ஒரு அரை மணி நேரம் ஆனது. தூங்கி வழியும் முகத்துடன் கதவை திறந்து எட்டிப் பார்த்த நாயரிடம்,

“நாயர் அண்ணா.. நல்லா இருக்கீங்களா அண்ணா..!!”

என்றாள் நந்தினி வாட்ச்மேனிடம் வீசிய அதே புன்னகையுடன்.

அத்தியாயம் 28

அன்று மாலை 5.20

கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு தாண்டிய வனப்பகுதி அது. அசோக்கின் கார் சாலையோரமாய் தனியாக நின்று கொண்டிருந்தது. அவ்வப்போது ‘விர்ர்ர்ர்..’ என கடந்து செல்லும் வாகனங்களை தவிர.. அவ்விடத்தில் ஆள் அரவம் ஏதும் இல்லை..!! கார் பானட்டில் அசோக் சாய்ந்து படுத்திருந்தான். இடதுகால் மேல் படர்ந்திருந்த அவனது வலதுகால், அனிச்சையாக ஆடிக்கொண்டிருந்தது. அவனுடைய பார்வை, சற்று தூரத்தில் நெருக்க நெருக்கமாய் வளர்ந்திருந்த சவுக்கு மரங்களையும், அதன் பின்னணியில் தெரிந்த கடலலைகளிலும் நிலைத்திருந்து. கையில் இருந்த க்ளாஸில் உயர் ரக விஸ்கி..!! அவ்வப்போது அதை உறிஞ்சிக்கொள்வதும், பிறகு கடலை வெறிப்பதுமாக இருந்தான்..!!

அவனுடைய மனதும் அந்த கடலை போலவே அமைதியிழந்து தவித்தது. அன்று முழுதும் நடந்த நிகழ்வுகள், அவனது மனத்திரையில் திரும்ப திரும்ப படமாக ஓடிக்கொண்டிருந்தன. அன்று காலையில் நந்தினியை வளைத்து, தன்னோடு இழுத்து பிடித்து வைத்திருந்த தருணம், அவனுக்கு நினைவு வந்தது. அதை நினைக்கும்போதே அவனுடைய இதயத்தில் சில்லென ஒரு சுகம் பரவுவதை அவனால் உணர முடிந்தது. காலையில் இருந்த அந்த மகிழ்ச்சி, மதியமே கலைந்து போனதை நினைக்கையில் வேதனையாக இருந்தது.

அந்த டெய்ஸி செய்த காரியத்தால் அவனுக்கு ஏற்பட்ட அவமானத்தை அவனால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அலுவலகத்தில் எல்லோரும் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்றொரு கவலை. கற்பகம் உட்பட யாருமே தன்னை நம்பவில்லையே என்றொரு ஆதங்கம். இனி தன் தந்தையின் முகத்தில் தான் எப்படி விழிக்கப் போகிறேன் என்றொரு தவிப்பு. எல்லாவற்றிற்கும் மேலாக.. அவள்.. நந்தினி.. நெருங்க நினைக்கையில் இப்படி விலகிகும்படி ஆயிற்றே என்றொரு ஏக்கம்..!!

விஸ்கியை கொஞ்சம் சிப்பிக் கொண்டான். தலை விண்விண்ணென்று தெறிக்க, கண்களை இறுக்கி மூடிக்கொண்டான். கார்க்கண்ணாடியில் முதுகை சாய்த்து படுத்துக்கொண்டு, கொஞ்ச நேரம் அப்படியே கிடந்தான். ஆல்கஹால் மட்டுமல்லாமல், பலவித குழப்ப எண்ணங்களும் இப்போது அவனது மூளையை ஆக்கிரமித்திருந்தன.

‘ஏன் அப்படி செய்தாய்..? அத்தகைய அமில வார்த்தைகளை ஏன் அவள் மீது வீசினாய்..? அவள் எவ்வளவு துடித்துப் போயிருப்பாள்..?’

‘அவள் செய்தது மட்டும் சரியா..? இரண்டு வாரங்களாக என்னை எப்படி உதாசீனம் செய்தாள்..? நான் எவ்வளவு துடித்துப் போயிருப்பேன்..?’

‘ஏன் உதாசீனம் செய்ய மாட்டாள்..? வேறொரு பெண் மீதிருந்த ஆசையை உன்னிடம் தீர்த்துக் கொண்டேன் என்றால் எந்த மனைவிக்குத்தான் கோவம் வராது..?’

‘சரி அது போகட்டும்.. அவளிடம் எப்படி கெஞ்சினேன்..? ஏன் என்னை அவள் நம்பவில்லை..? மேலும் மேலும் நெருப்பை கொட்டினால் நானுந்தான் என்ன செய்வேன்..?’

‘அவளுந்தான் வேறென்ன செய்வாள்..?அவள் கண்ணெதிரே கண்ட காட்சி அத்தகையது அல்லவா..? அவளுடைய கோவத்தில் ஒளிந்து கிடப்பது உன் மீதான காதல் அல்லவா..?’

‘ஹாஹா.. காதலாம்.. பொடலங்கா காதல்..? யாருக்கு வேண்டும்..? வலியை தருகிற இந்த காதல் எனக்கு வேண்டாம்..!! நான் இப்படியே இருந்து கொள்கிறேன்..!! யாரும் என்னை காதலிக்கவும் வேண்டாம்.. நானும் யாரையும் காதலிப்பதாக இல்லை..!!’

‘காதல் வேண்டாம்.. காதல் வேண்டாம்..’ என்று மனதுக்குள்ளேயே மந்திரம் போல சொல்லிக்கொண்டு கிடந்தான்..!! எவ்வளவு நேரம் அந்த மாதிரி கிடந்தானோ..?? அவ்வப்போது அவனது காது கிழித்து விரைந்து செல்லும் வாகனங்கள் கூட அவனிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை..!! நெடுநேரம் கழித்து விழிகளை மெல்ல திறந்தவன், சற்றே அதிர்ந்து போனான்..!!

அவனுக்கு எதிரே அந்த ஆள் நின்றிருந்தான்..!! பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துபவன் என்று, அவனை பார்த்ததுமே புரிந்து கொள்ள முடிந்தது..!! எழும்பும், தோலுமாய் தேகமும்.. அழுக்கும், கந்தலுமாய் உடையும்..!! நெடுநாளாய் எண்ணெய் காணாது சிக்குப்பிடித்துப் போன தலை.. நீண்டநாளாய் சவரம் செய்யாமல் நீளமாய் வளர்ந்துவிட்ட தாடி..!! கன்னங்கள் ஒடுங்கிப் போயிருந்தன.. கண்கள் குழிவிழுந்து கிடந்தன..!! அவனுடைய கையில் ஒரு தேங்காய் மூடி.. காலுக்கருகே நாய் மாதிரியே காட்சியளிக்கும் ஒரு மிருகம்..!!

அந்த ஆளை ஓரிரு வினாடிகள் திகைப்பாய் பார்த்த அசோக், அப்புறம் ‘என்ன..?’ என்பது போல தலையை அசைத்தான். அந்த ஆள் ‘ம்ம்.. ம்ம்ம்ம்..’ என்றவாறு கார் பானட் நோக்கி கை நீட்டினான். அவன் கை நீட்டிய திசையில் அந்த விஸ்கி பாட்டில்..!! அசோக் அந்த விஸ்கி பாட்டிலையும், அந்த ஆளையும் ஒரு இரண்டு முறை மாறி மாறி பார்த்தான். அப்புறம் போதையால் குழறிப்போன குரலில் அவனிடம் கேட்டான்.

“ஸ்..ஸ்காட்ச் விஸ்கி.. சாப்பிடுவீங்களா..??”

“ம்ம்ம்.. ம்ம்ம்..”

“மி..மிக்ஸிங்க்கு தண்ணிதான் இருக்கு.. ஓகேவா..?”

“தண்ணி வேணாம்.. அது மட்டும்..!!”

“சிக்கன்லாம் இல்ல.. சிப்ஸ்தான்..!!”

“சிப்ஸ் என் சிறுத்தைக்கும் புடிக்கும்..!!”

அந்த ஆள் இளித்தவாறு சொல்ல, அசோக் இப்போது அவன் காலுக்கருகே படுத்திருந்த நாயை ஒருமுறை பார்த்தான். நின்றிருந்த அந்த ஆளுக்கு நாய் வேஷம் போட்டால் எப்படி இருப்பானோ அதே மாதிரி இருந்தது. சோமாலியாவில் இருந்து நடந்தே இந்தியாவிற்கு வந்து சேர்ந்த நாய் மாதிரி இருந்தது. ‘இதுக்கு பேரு சிறுத்தையா..??’ என்று எண்ணிக்கொண்டான்.

விஸ்கி பாட்டில் திறந்து அந்த ஆள் கையிலிருந்த தேங்காய் மூடியில் ஊற்றினான். அவன் ஊற்றி முடித்ததுமே, அந்த ஆள் அதை அப்படியே தன் தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டான். குடித்து முடித்ததும் ‘க்க்க்க்காகாஹாஹாஹ்ஹ்..’ என்று கண்கள் மூடி கனைத்துக் கொண்டான்.

“எப்புடி..??” அசோக் கேட்க,

“பட்டை சரக்கு மாதிரி சுர்ருன்னு இல்ல..!! இருந்தாலும் பரவால.. தாகத்துக்கு தேவல..!!” அந்த ஆள் எகத்தாளமாகவே பதில் சொன்னான்.

Comments

Scroll To Top