ஆண்மை தவறேல் – 19

(Tamil Kamakathaikal - Aanmai Thavarael 19)

Raja 2013-12-01 Comments

Tamil Kamakathaikal – சொன்ன கௌரம்மா கொஞ்ச நேரம் அமைதியாகவே இருந்தாள். தலையை குனிந்தவாறு தரையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். பழைய நினைவுகளை ஒன்றன்பின் ஒன்றாக மனதுக்குள் மாலை மாதிரி கோர்த்துக் கொண்டிருக்கிறாளோ என்று எண்ண தோன்றியது. அப்புறம் லேசாக தொண்டையை செருமிக்கொண்டு ஆரம்பித்தாள்.

“எங்க அப்பாருக்கு கூலி வேலைதான்மா.. அன்னன்னிக்கு ஒழைச்சாத்தான் குடிக்க கஞ்சி.. இல்லன்னா பட்டினிதான்.. அம்மா ஒரு பண்ணை வூட்டுல எடுபுடி வேலைலாம் பாத்துட்டு இருந்துச்சு.. அது நல்ல பெரிய வூடு.. பெருத்த பணக்காரவுக அவுக..!! எங்க அப்பன் ஆத்தாவுக்கு நான் ஒத்தை புள்ளை.. நானும் சின்ன வயசுல இருந்து அந்த வூட்டுலதான் அம்மாவோட வேலை பாக்குறது..!! வீட்டை பெருக்கி சுத்தம் பண்றது.. தண்ணி சொமக்குறது.. ஆடு மாடுக்கு தீனி வைக்கிறது.. அதுக போடுற சாணத்தை அள்ளி போடுறது..!! எங்க மொதலாளிக்கு நாலு புள்ளைக.. எல்லாத்துக்கும் எளய புள்ளைதான் என் வூட்டுக்காரரு.. சின்ன வயசுல இருந்தே எனக்கும் அவருக்கும் சிநேஹிதம்.. ஒண்ணாதான் வெளையாடுவோம்.. காட்டுக்குள்ள சுத்தி திரிவோம்.. மலை மேல ஏறி யானை பாப்போம்..!! சின்ன வயசு சிநேஹிதம்.. நாங்க வளர வளர.. எங்களை விட வேகமா வளந்துச்சு.. சின்ன வயசுல அதை கண்டுக்காம விட்ட எங்க மொதலாளி, நாங்க பெரியாளானப்புறம் என்னை கண்டதுண்டமாக்குறேன்னு கெளம்பிட்டாரு..!!”

பழைய நினைவுகளில் சுத்தமாக மூழ்கிப் போயிருந்த கௌரம்மா.. நிறுத்தி, நிதானமாக, தெளிவாக சொன்னதை எல்லாம் நந்தினி எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

“அவரை வூட்டுல அடைச்சு போட்டுட்டாங்க.. அவரு அப்பாவும், அண்ணனுகளும் என்னை தீத்து கட்ட திட்டம் போட்டுருக்காங்க.. அதை கேட்டு இவரு பதறி போய்.. அங்க இருந்து தப்பிச்சு எங்க வூட்டுக்கு ஓடி வந்துட்டாரு..!! ‘இங்க இருந்தா உன்னை கொன்னு போட்ருவாங்க.. என்னோட வந்ததுடு கௌரம்மா..’ன்னாரு..!! எனக்கும் வேற வழி தெரியலை.. என்னை பெத்தவங்களுக்கும் வேற வழி தெரியலை.. கட்டுன பொடவையோட, கழுத்துல ஒரு நகை நட்டு கூட இல்லாம அவரோட கெளம்பிட்டேன்..!! சித்தூர் போனோம்.. அங்க இருந்து ரயிலேறி திருப்பதி போயிட்டோம்.. மடத்துல தங்கிக்கிட்டோம்..!! கைல இருந்த காசுலாம் நாலு நாளைக்கு ரொட்டி வாங்கத்தான் சரியா இருந்தது.. அவரும் நானும் வெறுங்கையோட நின்னோம்.. வேலையும் எதுவும் கெடைக்கலை.. வேலை தர்றேன்னு சொன்னவனுக என்னை பார்த்த பார்வையே சரியில்ல.. ஊருக்கும் திரும்ப போக முடியாது.. எங்களை கண்டுபுடிச்சு காவு குடுக்குறதுக்கு ஒரு கூட்டமே காத்துக்கிட்டு இருக்குது.. என்ன பண்றதுன்னு எங்களுக்கு எதுவும் புரியலை நந்தினிம்மா..!!”

கௌரம்மா தன் விழிகளை விரித்து வைத்தவாறு.. ஒருவித பிரம்மை பிடித்தவள் மாதிரி.. ஏதோ மொத்த சம்பவமும் இப்போது மீண்டும் தன் கண்முன் நடப்பது போல பாவித்துக்கொண்டு.. நெஞ்சு குமுற சொல்லிக் கொண்டிருந்தாள்..!! நந்தினியும் இப்போது அவளுடைய கதையில் மிகவும் ஒன்றிப் போய் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“உயிரை விட்ரலாம்னு முடிவு பண்ணினோம்..!! மலை மேல ஏறி ஏழுமலையானை பாத்துட்டு.. ‘ஏண்டா எங்களுக்கு இந்த நெலமையை கொடுத்த.. நாங்க என்ன பாவம் செஞ்சோம்..?’னு அவனை நாலு கேள்வி கேட்டு அழுதுட்டு.. அந்த மலைல இருந்தே குதிச்சு உயிரை விட போனோம்..!! சாவுறதுக்கு முன்னாடி கடைசியா ஒருதடவை கட்டி புடிச்சு அழுதுட்டு இருந்தோம்.. அப்போத்தான் எங்களோட சேர்ந்து அழுத அந்த பிஞ்சுக்கொரலும் எங்க காதுல வுழுந்துச்சு..!! திரும்பி பாத்தா.. ஒரு அஞ்சு வயசு புள்ளை தனியா நின்னு ‘அம்மா அம்மா’ன்னு அழுதுட்டு இருந்தது..!! நம்ம அசோக்கு.. எங்க உசுரை காப்பாத்த அந்த ஏழுமலையான் அனுப்பி வச்ச அசோக்கு..!!”

அவ்வளவு நேரம் கண்ணீர் விட்டவாறு தன் கதையை சொல்லிக்கொண்டிருந்த கௌரம்மாவின் முகத்தில் இப்போது பட்டென ஒரு பிரகாசம்..!! ‘அசோக்கு..!!’ என்று சொல்லும்போது அவளுடைய உடலில் ஒரு சிலிர்ப்பு..!! அவளுடைய பரவச உணர்ச்சி நந்தினியையும் தொற்றிக் கொண்டது.

“எங்களுக்கு கொஞ்ச நேரம் ஒன்னும் புரியலை.. பெத்தவுகளை பிரிஞ்சு கொழந்தை தனியா வந்துடுச்சுன்னு தெரிஞ்சது.. செத்துப்போக நெனச்ச எங்களுக்கு, அந்த பச்சை கொழந்தையை அப்படியே வுட்டுட்டு கீழ குதிக்க மனசு வரலை..!! புள்ளைய தூக்கிட்டு ஓடுனோம்.. அதுக்குள்ளே அம்மாவும், ஐயாவும் அழுதுட்டே எதுக்க வந்தாக.. புள்ளையை எங்ககிட்ட வாங்கி முத்தமா கொடுத்து கொஞ்சுனாக.. புள்ளை உசுரை காப்பாத்துன எங்களை கையெடுத்து கும்பிட்டாக..!! அப்புறம் எங்க கதையை பத்தி கேட்டவுக.. எங்களையும் அவுக கூட கூப்டுக்குட்டு மெட்ராசுக்கு வந்துட்டாக.. அப்போருந்து நானும் என் வூட்டுக்காரரும் இங்கதான்.. எங்க குடும்பத்தை மறந்து.. இதுதான் எங்க குடும்பம்னு நெனச்சு வாழ்ந்துட்டு இருக்கோம்..!! அன்னைக்கு மட்டும் அசோக்கு அந்த எடத்துக்கு வரலைன்னா.. நாங்க செத்து இப்போ இருபத்திரண்டு வருஷம் ஆயிருக்கும்மா..!!”

நந்தினிக்கு இப்போது எல்லாம் புரிந்தது. கௌரம்மா, ராமண்ணா, மஹாதேவன், அசோக்.. அவர்களுக்கு இடையிலான அந்த அன்பும், புரிதலும், விசுவாசமும்.. அதற்கு அடிப்படையான பழைய உண்மைகளும்..!! எல்லாம் நந்தினிக்கு தெளிவாக புரிந்தது..!! ஆனால்.. கௌரம்மாவுக்கும், ராமண்ணாவுக்கும் இப்படிப்பட்ட ஒரு பின்னணி இருக்கும் என்றுதான் நந்தினி சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை..!! அவள் அதை எண்ணி வியந்து கொண்டிருக்கும்போதே, கௌரம்மா திடீரென எதையோ நினைத்தவளாய் மீண்டும் சோகமான குரலில் ஆரம்பித்தாள்.

“இருபத்தி ரெண்டு வருஷம்..!! எப்படி போச்சுன்னே தெரியலை..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. என் வூட்டுக்காரருக்கு படிப்பு இல்லாட்டாலும்.. வீடு, பால்ப்பண்ணை, காடு கழனின்னு.. நல்ல சொத்துபத்து.. ஏவுன வேலையை கேக்குறதுக்கு எரநூறு ஆளுக இருப்பாக அங்க..!! எப்படி இருக்க வேண்டியவரு தெரியுமா..?? எந்த கொறையும் இல்லாம ராசா மாதிரி காலாட்டிட்டு வாழ்ந்திருக்க வேண்டியவரு.. இந்த அதிர்ஷ்டம் கெட்ட சிறுக்கியை காதலிச்ச பாவத்துக்கு.. காலம் பூரா அவரை காரோட்ட விட்டுட்டேன்..!!” சொல்லும்போதே கௌரம்மாவின் கண்களில் நீர் தாரை தாரையாய் ஓட ஆரம்பித்தது. நந்தினி பதறிப்போனாள்.

“ஐயோ.. என்னம்மா நீங்க..? அழாதிங்க.. கண்ணை தொடைச்சுக்காங்க..!! காரு ஓட்டுனா என்ன.. கலெக்டரு உத்தியோகமா இருந்தா என்ன..? நீங்க ரெண்டு பேரும் சேந்து இருக்கீங்களே.. அந்த சந்தோஷத்தை விட வேற என்ன வேணும்..??” நந்தினி அவ்வாறு சொன்னதும் கௌரம்மா பட்டென்று தன் கண்களை துடைத்துக் கொண்டாள். மீண்டும் உதட்டில் புன்னகையுடன் சொன்னாள்.

“ஆமாம்மா..!! அவரும் அடிக்கடி அதைத்தான் சொல்வாரு..!! சொத்து பத்தெல்லாம் உன் ஒத்தை சொல்லுக்கு ஈடாகுமான்பாரு.. ‘உன் மூஞ்சை பாத்தா எனக்கு போதும்மா.. உன் கையால ஒருவாய் சோறு சாப்பிட்டா எனக்கு போதும்மா’ன்னு சொல்வாரு..!! என் மேல அவருக்கு கொள்ளை பிரியம்..!!” கௌரம்மா பரவசமாக சொல்ல,

“ம்ம்.. எனக்கு தெரியும்..!!” என்றாள் நந்தினியும்.

“அந்த ஏழுமலையான் கருணையால இந்த குடும்பத்துல வந்து சேர்ந்தோம்.. ரொம்ப சந்தோஷமா, ஒரு திருப்தியான வாழ்க்கை வாழ்ந்துட்டோம்.. எங்களுக்கு ஒரு புள்ள இல்லைன்ற கவலை கூட எங்களுக்கு கெடயாது.. அசோக்கை எங்க புள்ளையாத்தான் நெனச்சுக்குவோம்..!! அதுவும்.. அம்மா போன அந்த கொஞ்ச நாளு.. ஒரு ரெண்டு வருஷம்.. ஐயா அப்படியே உடைஞ்சு போயிட்டாரு.. பித்து புடிச்ச மாதிரித்தான் இருந்தாரு.. அப்போலாம் அசோக்கை நானும், என் வூட்டுக்காரரும்தான் கவனிச்சுக்குவோம்.. அசோக்கு என் வூட்டுக்காரரு நெஞ்சுல படுத்துத்தான் தூங்கும்.. அம்மா அம்மான்னு என் காலையே சுத்தி சுத்தி வரும்..!!”

“ம்ம்.. அசோக் ரொம்ப கொடுத்து வச்சவரு.. ஒரு அம்மா இல்லாம போனாலும், உங்க மூலமா அவருக்கு இன்னொரு அம்மா கெடைச்சிருக்காங்க..!!”

“ஹாஹா.. ஆமாம்.. அசோக்கும் அதையேதான் சொல்லும்..!!”

“என்ன சொல்வாரு..?”

“எனக்கு ரெண்டு அம்மான்னு சொல்லும்..!! இப்போவும் ரொம்ப குஷியாயிட்டா.. அம்மா அம்மான்னு என்னை கொஞ்சும்..!!” சொல்லும்போதே கௌரம்மாவின் முகத்தில் ஒரு சந்தோஷம் கலந்த வெட்கம்.

“ம்ம்.. அம்மான்னு யாராவது நம்மளை கூப்பிடுறதே கூட ஒரு பெரிய சந்தோஷம்தான் இல்ல..? அந்த ஃபீலிங்கே தனி இல்ல..??”

“ஆமாம்மா.. அசோக் அப்படி என்னை கூப்பிடுறப்போலாம்.. எனக்கு மனசு அப்படியே பூரிச்சு போயிடும்..!! தாயில்லா புள்ளைக்கு நாம தாயா இருக்கோமேன்னு பெருமையா நெனச்சுப்பேன்..!! ஆனா அந்த அம்மா விஷயத்துல.. கொஞ்சநாள் அசோக்கு என்னையே பொறாமைப்பட வச்சுடுச்சு தெரியுமா..?”

“அப்படியா..? என்னாச்சு..?”

நந்தினி அந்த மாதிரி ஆர்வமாக கேட்டதுந்தான், கௌரம்மா தான் அவசரப்பட்டு அவ்வாறு சொல்லிவிட்டதை உணர்ந்தாள். உடனே தடுமாற்றமாய் சமாளிக்க முயன்றாள்.

Comments

Scroll To Top